ADDED : ஆக 07, 2025 02:02 AM

சென்னை: ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றக் கோரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக காங்., எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் ஜாதி குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, அரசு வேலை என நிறுத்திக் கொள்ளாமல், ஆணவ படுகொலைகளை தடுக்க, தனி சிறப்பு சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இயற்ற வேண்டும்,'' என்றார்.
தங்கபாலு பேசுகையில், ''நானும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவன் தான். காதலிக்கும் இரு மனங்கள் சேர்ந்து விட்டால், அது திருமணமாக முடிய வேண்டுமே தவிர, கொலையாக மாறக்கூடாது. காதலிக்கும் பிள்ளைகளிடம் பேசி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமை,'' என்றார்.
போராட்டத்தில், வி.சி., துணை பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான பாலாஜி மற்றும் காங்கிரஸ் எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற வெளியூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர், பசியில் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.