'மனைவிக்கு வருமானம் அதிகம் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை'
'மனைவிக்கு வருமானம் அதிகம் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை'
ADDED : செப் 04, 2025 01:56 AM

சென்னை:'மனைவிக்கு அதிக சொத்துக்கள், வருமானம் இருந்தால், ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை' என தெரிவித்த, சென்னை உயர் நீதிமன்றம், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட, குடும்பநல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த, சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர், தன் மனைவிக்கு மாதம் 30,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், தன் மனைவிக்கு, மாதம் 30,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் 'நீட்' தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது படிப்புக்கான செலவாக, 2.77 லட்சம் ரூபாயை தர, மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம், அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் 'ஸ்கேன் சென்டர்' நடத்தி வருகிறார் என, மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை. அதே நேரத்தில் மகனுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவில், இந்த நீதிமன்றம் தலையிடவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.