'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆக வேண்டுமானால் நாளிதழ்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்'
'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆக வேண்டுமானால் நாளிதழ்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்'
ADDED : டிச 14, 2024 11:17 PM
“சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற நாளிதழ்களை ஆழ்ந்து படிப்பது அவசியம்,” என, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., நிறுவனத்தின் இயக்குனர் ரவீந்திரன் கூறினார்.
'சிவில் சர்வீசஸ் தேர்வுகளும், சமீபத்திய மாற்றங்களும்' என்ற தலைப்பில், அவர் பேசியதாவது:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு திட்டமிடாமல் படிப்பது, முறைப்படி திட்டமிட்டு படிப்பது என, இரு வழிகளை பின்பற்றலாம். கல்லுாரியில் இளநிலை படிப்பவர்கள், முறைப்படி திட்டமிடாமல், கிடைக்கும் நேரங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிக்கலாம்.
பொது அறிவு கேள்வி
இந்த தேர்வு எழுதுபவர்கள், நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
நடப்பு நிகழ்வுகளில் இருந்துதான் பொது அறிவு கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகின்றன. நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஒரே வழி, நாளிதழ்களை படிப்பதுதான்.
எனவே, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்து விட்டால், தினசரி மூன்று நாளிதழ்களையாவது படிக்க வேண்டும்.
வெறுமனே நாளிதழ்களை வாசிக்காமல், பாடப் புத்தகங்களை படிப்பது போல ஆழ்ந்து படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து எழுதப்படும் கட்டுரைகள், பல்வேறு துறை நிபுணர்களின் சிறப்பு பேட்டிகளை ஆழ்ந்து படித்து, அதில் உள்ள விஷயங்களை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய வேண்டும்; நண்பர்களுடன் விவாதிக்க வேண்டும்.
புதிய சிந்தனைகள்
அப்போதுதான் பல கேள்விகள் எழும்; அதற்கு பதிலை தேடித் தேடி பெறும்போது, அறிவுத் திறனும் மேம்படும்; புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் மாற்றங்கள், புதிய சவால்கள் வந்து கொண்டே இருக்கும். அனைத்தையும் எதிர்கொள்ள, மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கு உதவ, வாஜிராம் அண்ட் ரவி இன்ஸ்டிடியூட் தயாராக உள்ளது. எங்கள் பயிற்சி மையத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையும் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.