ஐந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
ஐந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை
ADDED : ஆக 30, 2025 05:34 AM
சென்னை : புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரத்தில், நான்கு ஐ.பி.எஸ்.,கள் உட்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடலுார் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். விசாரணையின் போது, 'புகார் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது' என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
'இதைச் செய்ய தவறிய, குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய 11 பேருக்கு எதிராக, டி.ஜி.பி., துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்க தவறிய, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி வகித்த, நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி., - ஆர்.ராஜாராம் ஆகியோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், அரசு வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, ''அதிகாரிகள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'ஐந்து காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

