மதுரையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.36,660 கோடி முதலீட்டை ஈர்க்க ஒப்பந்தம்
மதுரையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.36,660 கோடி முதலீட்டை ஈர்க்க ஒப்பந்தம்
ADDED : டிச 07, 2025 01:55 AM
சென்னை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், 36,660 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவற்றின் வாயிலாக, 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கப்படுகிறது.
மேலுாரில், 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற பின், மதுரை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 18,795 கோடி ரூபாயில், 18,881 வளர்ச்சி திட்டப் பணிகளை, முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
மேலும், 8,668 கோடி ரூபாயில், 96.55 லட்சம் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் என, மொத்தம் 27,463 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.
முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடக்கும் விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் வழங்குகிறார்.
மேலும், 3,065 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணி களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

