கிறிஸ்துவர்கள் வசிக்கும் பகுதியில் அன்னதானம் கூடாதா? ஒரு மத நிகழ்ச்சியில் மற்ற மதத்தினரும் பங்கேற்க ஐகோர்ட் அறிவுரை
கிறிஸ்துவர்கள் வசிக்கும் பகுதியில் அன்னதானம் கூடாதா? ஒரு மத நிகழ்ச்சியில் மற்ற மதத்தினரும் பங்கேற்க ஐகோர்ட் அறிவுரை
ADDED : நவ 02, 2025 02:13 AM
மதுரை: கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், அரசுக்கு சொந்தமான மைதானத்தில், கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், 'ஒவ்வொரு மத நிகழ்விலும், மற்ற மதத்தினரும் பங்கேற்க வேண்டும்' என அறிவுரை வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, அன்னதானம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மாற்று இடம் திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி ராஜாமணி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பஞ்சம்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவிலுக்கு அருகிலுள்ள மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி கோரி, ஆத்துார் தாசில்தாரிடம் மனு அளித்தேன்; அவர் நிராகரித்தார். பஞ்சம்பட்டியிலிருந்து முன்னிலைக்கோட்டைக்கு செல்லும் பொது சாலையாக உள்ள மாற்று இடத்தை ஒதுக்கினார். நிராகரித்தது சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
அரசு தரப்பு, 'மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நடத்த அனுமதித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்' என வாதிட்டது. வழக்கில் எதிர்மனுதாரர் சுரேஷ் பெர்க்மன்ஸ் தரப்பு, 'மைதானத்தின் ஒரு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு மேடை கட்டப்பட்டது.
'அது பாஸ்கா மேடை என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஈஸ்டர் பண்டிகையின் போது,அம்மேடையில் நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன' என விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமாக இல்லாமல், அரசுக்கு சொந்தமாக இருக்கும்போது, அது மத அல்லது சமூக பின்னணியை பொருட்படுத்தாமல் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும். கிறிஸ்துவ சமூகம் ஈஸ்டர் பண்டிகையின் போது நிலத்தை பயன்படுத்தி வருகிறது.
கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் அன்று மைதானத்தை பயன்படுத்தலாம்; ஆனால், ஹிந்துக்கள் அதே இடத்தில் அன்னதானம் நடத்த முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈஸ்டர் அன்று ஹிந்துக்கள் அன்னதானம் அல்லது வேறு எந்த நிகழ்வையும் அதே மைதானத்தில் நடத்த விரும்புவது போல் இல்லை.
உரிமைகள் நவ., 3ல் மைதானத்தில் அன்னதா னம் நடத்த அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்துவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுமா என, எதிர்மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினேன்.
எதிர் தரப்பு வழக்கறிஞர் அமைதியாக இருந்தார். கிறிஸ்துவ சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் என அவரால் கூற முடியவில்லை.
அரசுக்கு சொந்தமான ஒரு பொது மைதானம், மக்கள் பொதுவாக பயன்படுத்த கிடைக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அதை பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. விலக்கி வைத்தால் அது அரசியலமைப்பிற்கு முரணானது.
அன்னதானம் நடத்துவதை அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், ஒருவரின் அடிப்படை உரிமையின் எல்லைக்குள் கூட கொண்டு வர முடியும். ஏதேனும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதை உரிய முறையில் கையாள வேண்டும். அடிப்படை உரிமைகளை நசுக்கும் எளிதான வழிமுறையை போலீசார் தேர்ந்தெடுக்கக்கூடாது.
மனுதாரரின் கிராமத்தில், 2,500 கிறிஸ்துவ குடும்பங்கள், 400 ஹிந்து குடும்பங்கள் உள்ளன. கிறிஸ்துவர்களை விட ஹிந்துக்கள் குறைவாக உள்ளனர்.
மைதானத்தில் அன்னதானம் நடத்த கிறிஸ்துவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என போலீசார் கூறுவதாக தெரிகிறது. இது மிக வருந்தத்தக்க நிலை.
ஒவ்வொரு மத நிகழ்வி லும், மற்ற மதத்தினரும் பங்கேற்க வேண்டும். ஒரு கிறிஸ்துவ நண்பர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது,முதலில் அவரை நான் வாழ்த்த வேண்டும். ஒரு முஸ்லிம் நண்பர், நானும் உண்ணும் வகையில் நோன்பு கஞ்சி சைவமாக மட்டுமே தயாரித்த சந்தர்ப்பத்தை நினைவுகூர்கிறேன். அதை நான் ரசித்தேன்.
கலாசாரம் நம் கலாசாரத்தின் அழகு இது. இத்தகைய தொடர்புகள் மட்டுமே மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உறுதி செய்யும். அத்தகைய கலாசார, நாகரிக ஒற்றுமை நடைமுறையில் நிரூபிக்கப்படாவிட்டால், சமூகத்தில் அமைதி இருக்காது.
அன்னதானம் நடத்த தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். சாலையில் மக்களை அமர வைத்து உணவு வழங்குவது சரியாக இருக்காது. சம்பந்தப்பட்ட மைதானம் அரசுக்கு சொந்தமானது; அந்த இடத்தில் நிகழ்வை நடத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படாது.
மைதானத்தில் அன்னதானம் நடத்த மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது. மைதானம் ஒப்படைக்கப்பட்ட அதே நிலையில் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி அமைதியாக நடைபெறுவதை திண்டுக்கல் எஸ்.பி., உறுதி செய்ய வேண்டும் .
இவ்வாறு உத்தரவிட்டார்.

