எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்ப்பது தவறு: அன்புமணி
எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்ப்பது தவறு: அன்புமணி
ADDED : பிப் 15, 2024 01:19 AM

சென்னை:''எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்க்காமல், தன் சொந்த நிதியிலிருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு உதவ வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
பா.ம.க.,வின் 22-வது நிழல் பட்ஜெட்டை, சென்னையில் நேற்று வெளியிட்டு, அவர் அளித்த பேட்டி:
வரும் 2023- - 24ம் நிதியாண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை, தமிழக அரசால் எட்ட இயலாது. இதனால், வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். தமிழகத்தின் கடன், 14.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். தி.மு.க., ஆட்சியில் பெரும் சரிவை நோக்கி, தமிழக பொருளாதாரம் செல்கிறது.
கிரானைட், மணல், தாது மணல் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரியில்லாத வருவாய் ஈட்டுவது; அதிக இனிப்பு, கொழுப்பு பொருட்களுக்கு 30 சதவீத கூடுதல் வரி; ஜாதிவாரி கணக்கெடுப்பு, முழு மதுவிலக்கு; குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் 5,000 ரூபாய் பரிசு உள்ளிட்ட அம்சங்களை, நிழல் பட்ஜெட்டில் முன்வைத்துள்ளோம்.
மழை, வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும். அதே நேரத்தில், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தவறு. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசே தன் சொந்த நிதியில் இருந்து உதவ வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசுக்கு அதிகாரம், தேவையான நிதி, பணியாளர்கள் உள்ளனர். ஆனாலும், தி.மு.க., அரசுக்கு மனம் இல்லை. 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

