ADDED : ஜூலை 16, 2023 05:59 AM

சென்னை : 'ஜனம் தமிழ்' செய்தி தொலைக்காட்சியின், 'டிஜிட்டல்' ஒளிபரப்பு, தமிழகத்தில் நேற்று துவங்கியது.
மலையாள செய்திகளுக்கான, 'ஜனம்' தொலைக்காட்சி, தன் தமிழ் செய்தி சேனலை, 'ஜனம் தமிழ்' என்ற பெயரில் துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த விழாவில், 'ஜனம் தமிழ்' டிஜிட்டல் ஒளிபரப்பை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வி.எச்.பி., மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சக்தி மசாலா அதிபர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, ஐ.ஆர்.எஸ்., அதிகாரி நந்தகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அண்ணாமலை, ''தமிழகத்தில், தேசியம் குறைவாக பேசப்படுகிறது. தேசிய செய்திகள் விரிவாக அலசப்படுவதில்லை.
''உலகின் தொன்மையான தமிழை, உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். செய்தி தொலைக்காட்சிகளில், 80 சதவீதம் அரசியல் தான். மற்ற செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே 'ஜனம் தமிழ்' துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ''எதிரி எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அச்சமின்றி செயல்படுபவர், அண்ணாமலை. பிரதமர் மோடி தமிழுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்,'' என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நட்ராஜ் பேசும்போது, ''இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அண்ணாமலை இருக்கிறார். அவரிடம் ஒரு தெளிவு இருக்கிறது. எந்தவொரு பிரச்னையையும் அலசி ஆராய்கிறார்,'' என பாராட்டினார்.
