ADDED : செப் 20, 2025 02:39 AM

சென்னை: ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36.56 கோடி ரூபாய் செலுத்த கோரி, வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரான, மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36.56 கோடி ரூபாயை செலுத்த கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சி.சரவணன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமான வரித் துறை தரப்பில், 'மறைந்த ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை, 36 கோடி ரூபாயில் இருந்து, 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப் பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, 'வருமான வரித் துறை, 36 கோடி ரூபாய் செலுத்தும்படி அனுப்பிய நோட்டீசை எதிர்த்த, இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல' என கூறி, தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், 'சட்டப்படி மனுதாரர் மாற்று நிவாரணம் கோரலாம்' என்றும் நீதிபதி தெரிவித்தார்.