ADDED : நவ 02, 2024 09:18 PM

திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3 மாதங்களுக்கு பின் கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று மாலை தங்கத்தேர் உலா நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தமிழக முதல்வரால் கடந்த 28.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெறுவதற்காக கடந்த ஜூலை 17ம் தேதி முதல் தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்தது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா இன்று (நவ. 2) தொடங்கி நவ 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இதையடுத்து கந்த சஷ்டி விழாவிற்காக இன்று மாலை தங்கத்தேர் உலா நடந்தது. தேரில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து சுவாமியை வழிபட்டனர். கந்த சஷ்டி ஐந்தாம் திருவிழாவான வருகின்ற நவ. 6ம் தேதி வரை தினசரி மாலை கிரிப்பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறுகிறது.