வெறுப்புணர்வு கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என நீதிபதிகள் எச்சரிக்கை
வெறுப்புணர்வு கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என நீதிபதிகள் எச்சரிக்கை
ADDED : டிச 06, 2025 01:59 AM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
'தற்போதைய நிலையில் இடைக்கால தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய இயலாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்; வெறுப்புணர்வு கருத்துக்களை பரப்ப வேண்டாம். மீறினால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அனுமதியில்லை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, மதுரை, எழுமலை ராம ரவிக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தொடர்பாக, டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
'தீபம் ஏற்றும் இடத்தை மாற்றியமைக்க கோவிலை கட்டாயப்படுத்த எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை; கோவிலின் நீண்டகால நடைமுறையில் தலையிட முடியாது' என, இதுபோன்ற ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் 2014ல் உத்தரவிட்டது.
தற்போது ராம ரவிக்குமார் அதே நிவாரணத்தை கோரியுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, இந்திய அரசியலமைப்பிற்கு முரணானது. மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்றம் கோவிலுக்கு சாதகமாக, 1994ல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 150 ஆண்டுகளுக்கு மேலாக, உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டப பகுதியில் மட்டுமே தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்துாண் பகுதியில் ஒருபோதும் ஏற்றப்படவில்லை என்பதை, தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். தீபத்துாணில் ஏற்றப்பட்டது என கூறுவதற்கு, கோவில் பதிவேடு, அறநிலையத்துறை ஆவணம், கல்வெட்டு, ஆகமத்தில் சான்றுகள் இல்லை.
அறங்காவலர் அல்லது செயல் அலுவலர் மட்டுமே கோவில் வழிபாடு, பூஜைகள் குறித்து முடிவு செய்ய முடியும். அதில் மாற்றம் செய்யுமாறு எந்தவொரு தனிநபரும் வலியுறுத்த முடியாது.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நாட்களுக்குள் செயல்படுத்துவது சாத்தியமற்றது. தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோல், மதுரை மாவட்ட கலெக்டர் மற்றொரு மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன், அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்; ராம ரவிக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகினர்.
தர்கா தரப்பு, 'தீபத்துாண் என குறிப்பிடும் பகுதி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்து உள்ளது' என்றது.
அறநிலையத்துறை தரப்பு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என கோரியது.
நீதிபதிகள், 'தற்போதைய நிலையில் தடை விதிப்பது குறித்து முடிவு செய்ய இயலாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்த பின், அதை பரிசீலித்து முடிவெடுக்கப்படும். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விரும்பும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக யாரும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது' என்றனர்.
தள்ளுபடி ராம ரவிக்குமார் தரப்பு, 'அரசு தரப்பில் தேவையின்றி சட்டம் - ஒழுங்கு பிரச்னை உருவாக்கப்படுகிறது' என தெரிவித்தது.
அரசு தரப்பு, 'அவ்வாறு எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் உணர்வுகளை துாண்டும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன' என்றது.
நீதிபதிகள், 'நடக்கும் ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றி கவனத்தில் கொண்டுள்ளோம். இவ்விவகாரத்தில் தேவையற்ற வெறுப்புணர்வு விமர்சனங்கள் எழுந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அதைப் பற்றி தேவையற்ற கருத்துக்களை பரப்பினால் சமூகத்தில் பாதிப்பு ஏற்படும்.
'நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். வெறுப்புணர்வு கருத்துக்களை பரப்ப வேண்டாம். இதை யார் மீறினாலும், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதை, இங்கு வழக்கு தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்த வேண்டும்' என, எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், 'தாக்கலாகும் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து டிச., 12ல் விசாரிக்கப்படும்' என்றனர்.
இதற்கிடையே, 'தீபத்துாணில் விளக்கேற்ற வேண்டும்' என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததை எதிர்த்து, மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

