/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் கடையில் திருடிய கன்னியாகுமரி நபர் கைது
/
மொபைல் கடையில் திருடிய கன்னியாகுமரி நபர் கைது
ADDED : மார் 18, 2026 04:46 AM

புதுச்சேரி: காமராஜர் சாலையில் மொபைல் கடையை உடைத்து திருடிய கன்னியாகுமரி மாவட்ட நபரை போலீசார் கைது செய்து, 12 மொபைல்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜன்பாபு, 65; காமராஜர் சாலையில் ராணி மொபைல் கடை நடத்தி வருகிறார்.
கடந்த பிப்ரவரி 4ம் தேதி இரவு இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் 24 புதிய மொபைல், 11 பழைய மொபைல், 7 பவர் பேங்க், 10 இயர் பட்ஸ், 15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராஜன்பாபு பெரியக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவின் பேரில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுருதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டம், தோப்பூர், மேலசங்கரன் குழியை சேர்ந்த ராமசாமி மகன் விஜயகுமார், 53; என்பவர் மொபைல் போன்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திரா மாநிலம், சித்துாரில் சுற்றித் திரிந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பின், கோர்ட் அனுமதி பெற்று, நேற்று முன்தினம் விஜயகுமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நத்தினர்.
அதில், திருடப்பட்ட மொபைல் போன்களை விருதாச்சலம், ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 12 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, விஜயகுமாரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

