கவர்னருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு; அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மனு
கவர்னருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு; அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மனு
ADDED : நவ 08, 2024 01:12 PM

சென்னை: பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கவர்னர் ரவியை சந்தித்து மனு கொடுத்தார்.
பட்டியலினத்தவருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதி திராவிடர் சமூக மக்கள், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். மேலும், அறிவித்தபடி, சென்னையில் நேற்று அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர்.
கொட்டும் மழையிலும் கவர்னர் மாளிகையை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, அனுமதியின்றி பேரணி நடத்தியதாக, கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷியாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கவர்னர் ரவியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது, அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு அளித்தார்.