'தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை' : ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
'தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை' : ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
ADDED : அக் 04, 2024 12:11 AM
ஈஷா யோகா மையம், எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவது இல்லை. திருமணமான, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும், ஒரு சிலரின் இருப்பிடமாக ஈஷா மையம் உள்ளது.
உண்மை இவ்வாறு இருக்கையில், இரு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர், எட்டு ஆண்டுகளாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் துாண்டுதலால், போராட்டங்களை நடத்தியும் தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையில், இரு பெண் பிரம்மச்சாரிகளும் கோர்ட்டில் ஆஜராகி, 'தங்களின் சொந்த விருப்பத்தின்படிதான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம்' என்று தெளிவுபடுத்தி உள்ளனர். ஈஷா யோகா மையத்தில் தன் மகள்களை காமராஜ் சமீபத்தில் சந்தித்த 'சிசிடிவி' காட்சிகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த 2016ல் காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், 'பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மை இல்லை. பிடித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டவர்கள், சுய விருப்பத்திலேயே தங்கி இருக்கின்றனர் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்' என, கூறியுள்ளனர்.
ஈஷாவிற்கு எதிராக செயல்படும் காமராஜ், பிற அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டு வரும் மின் தகன மேடை குறித்து தொடர் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், அரசின் எவ்வித அனுமதியின்றி தன்னிச்சையாக, 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று போலீசால் தடுக்கப்பட்டார்.
பின், எவ்வித முகாந்திரமுமின்றி, ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கில், போலீசாரின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தவிர மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போல, அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. எனவே, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.