ADDED : ஜன 30, 2024 07:48 AM
சென்னை : ''எந்த தேர்தலை பார்த்தும் பா.ஜ.,வுக்கு பயம் கிடையாது; ரஜினி, விஜய் உட்பட எந்தநடிகராக இருந்தாலும் ஆதரவு கேட்பது எங்கள் வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவர்களின் விருப்பம்,'' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தென்சென்னை லோக்சபா தொகுதி பா.ஜ., தேர்தல் அலுவலகம், வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, வானதி சீனிவாசன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: 'இண்டியா' கூட்டணி, மக்களுக்காக அல்லாமல், சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணியில் மிக முக்கிய பங்கு வகித்த நிதீஷ்குமார், தேசிய ஜனநாயககூட்டணிக்கு வந்துள்ளார்.
எங்கள் கூட்டணிக்கு, மேலும் பல புதிய கட்சிகள் வரும். தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதையெல்லாம், மக்களிடம் தெரிவிப்போம்.
எங்களை பொறுத்தவரை, நாட்டுக்காக எந்த கட்சி வந்தாலும் இணைத்துக் கொள்வோம்.
எதிர் கருத்து வைத்திருப்பவர்களும், எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக நிற்பவர்களும், 'சங்கி' என்று இழிவுபடுத்த ஆரம்பித்து உள்ளனர். அதை சிலர் பெருமையாக கருதுவதாக கூறுகின்றனர்.
எங்களை பொறுத்தவரை, நாட்டை நேசிக்கிறவர்களை சங்கி என்று கூறுவதில் பெருமை கொள்கிறோம். மக்களிடம் தொடர்ந்து ஆதரவு கேட்கிறோம். எங்களுக்கு அமோக ஆதரவு அளிக்கின்றனர். அதனால், எந்த தேர்தலை பார்த்தும் பா.ஜ.,வுக்கு பயம் கிடையாது.
ரஜினி, கமல், விஜய் உட்பட எந்த நடிகர் - நடிகையாக இருந்தாலும், ஆதரவு கேட்பது எங்களின் வேலை. ஆதரவு கொடுப்பதும், கொடுக்காததும் அவர்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.