ADDED : பிப் 14, 2024 02:10 AM
சென்னை:விளையாட்டு போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகளில் மதுபானம் வினியோகிக்க அனுமதி வழங்கும் அரசாணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவர் கே.பாலு, வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது. அரசு தரப்பில், ஏற்கனவே பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கோரிக்கை
தற்போது, கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால், விசாரணையை, மார்ச் 7க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அரசின் கூடுதல் பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கின் போது, மதுபானம் வினியோகிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கோரிக்கை விடுத்தன. அதை பரிசீலித்து, சிறப்பு உரிமம் வழங்க அரசு முடிவு செய்தது.
கடும் நிபந்தனைகள்
சிறப்பு உரிமத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொது மக்களின் பார்வையில் படும்படி அல்லாமல், தனி இடத்தில் மட்டுமே மதுபானம் வினியோகிக்க வேண்டும்.
சிறப்பு உரிமம் கேட்டு, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்; எவ்வளவு வழங்குவது என்பதை டாஸ்மாக் நிர்வாகம் தீர்மானிக்கும் என்பவை உள்ளிட்ட, பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும்.
நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்பு படைகள் அமைக்கப்படும்; நிபந்தனைகள் மீறப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்; முன்வைப்பு தொகையும் முடக்கப்படும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

