ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தயாரிப்பு
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தயாரிப்பு
ADDED : டிச 29, 2025 05:27 AM

சென்னை: மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 70க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது மற்றும் பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல் துறையின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான, தற்போது, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பாலநாகதேவி ஆகியோர், ஜனவரியில் டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
அதேபோல, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., அன்பு, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உட்பட ஏழு ஐ.ஜி.,க்கள், கூடுதல் டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவக்குமார், பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., அருளரசு உட்பட, 14 எஸ்.பி.,க்கள், டி.ஐ.ஜி.,க்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.
அதேபோல, உதவி எஸ்.பி.,க்களாக உள்ள இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 13 பேருக்கு, எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு தரப்பட உள்ளது. அந்த வகையில், தமிழகம் மற்றும் மத்திய அரசு பணியில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 47 பேர் பதவி உயர்வு பெற உள்ளனர்.
அதற்கான பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு, உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

