மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 12 மாவட்டங்களில் 1233 ஏக்கர் நிலம் சொந்தம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 12 மாவட்டங்களில் 1233 ஏக்கர் நிலம் சொந்தம்
ADDED : அக் 08, 2025 12:24 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில் மறு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதற்குரிய புள்ளிவிபர அறிக்கையை அரசுக்கு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
செப்., 4 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'மீனாட்சி அம்மன் கோயில், உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன. அதற்குரிய ஆவணங்கள், சொத்துக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா. இருக்கும்பட்சத்தில் அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கோயில் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
கோயில் தரப்பு வழக்கறிஞர் பரணிதரன்: மீனாட்சி அம்மன் மற்றும் உபகோயில்களுக்கு சொந்தமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1233.98 ஏக்கர் நிலம் உள்ளது. 133 பிளாட்கள், 108 கடைகள், மதுரை எழுகடல் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. செல்லுாரில் 8.37 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் உள்ளவர்கள் வாடகைதாரர்களாக தொடர சம்மதித்துள்ளனர். மற்றவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார்.
மனுதாரர்: ஆவணங்கள் திருப்தியளிப்பதாக இல்லை. சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆவணங்களை படித்து பார்த்து மனுதாரர் அக்.,23 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அக்., 10 ல் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஆவணங்களை படித்து பார்த்து விபரங்களை மனுதாரர் அறிந்து கொள்ளலாம்,' என்றனர்.