வி.சி.க., கொடிக்கம்ப பிரச்னையில் மதுரை வருவாய் அலுவலர்கள் போராட்டம் * அலுவலகங்களைப் பூட்டி பணியை புறக்கணித்தனர்
வி.சி.க., கொடிக்கம்ப பிரச்னையில் மதுரை வருவாய் அலுவலர்கள் போராட்டம் * அலுவலகங்களைப் பூட்டி பணியை புறக்கணித்தனர்
ADDED : டிச 11, 2024 08:25 PM

மதுரை:மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் நடும் பிரச்னையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று மதுரை மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலர்கள் விடுப்பு எடுத்து, அலுவலகங்களை பூட்டி பணிப்புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
சிலநாட்களுக்கு முன் வி.சி.க., தலைவர் திருமாவளவன் மதுரை வந்தார். அவர் வெளிச்சநத்தத்தில் 25 அடி உயர கொடிக்கம்பத்தை 45 அடி உயரமாக மாற்றி அமைத்து கொடியேற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி, போலீஸ், வருவாய்த் துறையினர் கொடிக்கம்பத்தை நிறுவ விடாமல் தடுத்தனர்.
பேச்சு வார்த்தைக்குப்பின், மாவட்ட நிர்வாகம் அவசர அனுமதி வழங்கி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பழனியாண்டி, வி.ஏ.ஓ., பரமசிவம், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை பிரச்னைக்குரிய தகவலை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக்கூறி தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோர் சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு வருவாய்த்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‛சம்பவ இடத்தில் 3 நாட்களாக கண்காணித்து தகவலை தெரிவித்துள்ளோம். நிலைமையை உணர்ந்து கூடுதல் போலீசாரை நியமிக்காததால் அங்கு தள்ளுமுள்ளு சம்பவம் நிகழ்ந்தது. இதில் வருவாய் அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வருவாய் அலுவலர்கள் மீது எடுத்தது பாரபட்சமானது' என்றனர்.
இதனால் வருவாய்த்துறையில் அலுவலர் சங்கம், நேரடி நியமன அலுவலர்கள் சங்கம், பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம், நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணிபுறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கப்பட்டது. அத்தனை சங்கங்களும் ஒன்று சேர்ந்ததால், மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலர்கள் பணியாற்றும் 11 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு, பொது வினியோகம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலம், மாவட்ட பதிவு வைப்பறை, நிலஅளவைத் துறை என பெரும்பாலான பிரிவுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. தாலுகா உட்பட வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு பூட்டுப்போடப்பட்டன.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், கோபி, ஜெயகணேஷ், கண்ணன், முத்துமுனியாண்டி, ராஜாமணி, சுரேஷ், மாரியப்பன், நந்தகுமார், சண்முகராஜா உட்பட அலுவலர்கள் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.
அவர்கள் கூறுகையில், ''வருவாய் அலுவலர்கள் மூவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சம்பவத்தின் போது நடவடிக்கை எடுக்காத போலீசார், அதற்கு காரணமான கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்' என்றனர்.
கலெக்டர் கூறுவது என்ன
கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலுவலகங்களில் துணை கலெக்டர்கள் பணியாற்றுகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. சங்கத்தினருடன் நேற்று முன்தினமே பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.