தற்காப்புக்கலை பயிற்சி திட்டம்: ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' நிதி 'கட்' அரசு பள்ளி மாணவிகள் அதிருப்தி
தற்காப்புக்கலை பயிற்சி திட்டம்: ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' நிதி 'கட்' அரசு பள்ளி மாணவிகள் அதிருப்தி
ADDED : ஆக 06, 2025 08:10 AM
மதுரை : அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு, தற்காப்புக்கலை பயிற்சியின் போது அவர்கள் சோர்வடையாமல் இருக்க ஊட்டசத்து 'ஸ்நாக்ஸ்' வழங்க ஒதுக்கப்பட்ட நிதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மாணவிகள் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு சூழலையும் தைரியமாக, நிதானமாகவும் எதிர்கொள்ள தேவையான ஆற்றல், திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் சில ஆண்டுகளாக தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக 6045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 ம் வகுப்பு மாணவிகளுக்கும், 5804 அரசு உயர், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்க பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கல்வியாண்டில் மூன்று மாதங்கள் அளிக்கப்படும் இப்பயிற்சிக்காக பயிற்சியாளருக்கு மாத சம்பளம் 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்தபின் மாலை 4:00 - 5:00 மணிக்கு தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது மாணவிகள் சோர்வின்றி தொடர பாசிப்பயறு, சுண்டல், வாழைப்பழம் என ஊட்டச்சத்தான 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4 ஆயிரத்தில், மாதம் ரூ. ஆயிரம் 'ஸ்நாக்ஸ்'க்கு ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்தா ண்டு, இத்திட்டம் குறித்து மாநில திட்ட இயக்குநர் (எஸ்.பி.டி.,) செயல்முறைகளில் ஊட்டச்சத்து 'ஸ்நாக்ஸ்' குறித்த விவரம் இடம் பெறவில்லை. பயிற்சியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.4 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்து தொடர்ந்து ஒரு மணிநேரம் தற்காப்புக்கலை பயிற்சியிலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்பதால் மாலை நேரம் ஊட்டசத்து 'ஸ்நாக்ஸ்' வழங்க ரூ.ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எவ்வித அறிவிப்பும் இன்றி அதற்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது. மாணவி கள் நலன் கருதி மீண்டும் 'ஸ்நாக்ஸ்' வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.