ADDED : நவ 23, 2025 01:00 AM

அரியலுார்: ''தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கருத்து,'' என ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை தெரிவித்தார்.
அரியலுாரில் அவர் அளித்த பேட்டி:
பீஹாரில் தே.ஜ., கூட்டணி பெற்ற வெற்றிக்கு, எஸ்.ஐ.ஆர்., ஒரு காரணம் என்றால், அங்கு கொட்டப்பட்ட அரசு நிதி மற்றொரு காரணம். மாநில அரசின் நிதியை விரயம் செய்து ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., பணி களை தமிழக அரசுடன் இணைந்து 'இண்டி' கூட்டணியினரும் கண்காணிக்கின்றனர்.
சட்டசபை தேர்தலில், எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என கூட்டணி கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவோம். கூட்டணி தலைமை, இந்த விஷயத்தில் நல்ல முடிவெடுக்கும். எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பர்.
கடந்த லோக்சபா தேர்தலைப் போல, வரும் சட்டசபைத் தேர்தலிலும், தனி சின்னத்தில் போட்டியிடவே விரும்புகிறோம். அது எங்கள் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய ஆசை.
மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் பெயர், மற்றொரு நபர் பதிவு செய்த கட்சி பெயர் என கூறப்படுகிறது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும் போதே திருட்டு பழக்கத்தில் ஆரம்பித்தால், கடைசி வரைக்கும் அப்படித்தான் தொடரும்.
இன்னொரு கட்சி பெயரை களவாடி இருப்பவர்களிடம், என்ன அரசியல் நேர்மையை எதிர் பார்க்க முடியும்.
இவ்வாறு கூறினார்.

