ADDED : பிப் 08, 2025 12:19 AM
சென்னை:தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் திருடப்பட்ட மற்றும் காணாமல் போன, 16,317 மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:
நாடு முழுதும் திருடப்பட்ட மற்றும் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்து புகார் பதிவு செய்ய, 'சஞ்சார் சாத்தி' என்ற இணையதளத்தை, மத்திய தகவல் தொடர்பு துறை செயல்படுத்தி வருகிறது.
பொது மக்கள், ceir.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தின் இணைப்பு வாயிலாக புகார் பதிவு செய்யலாம். இதில், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட மற்றும் காணாமல் போன, 79,748 மொபைல் போன்கள் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 48,031 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில், கடந்தாண்டு, 16,317 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற மொபைல் போன்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.