ADDED : ஜன 11, 2024 10:33 PM
சென்னை:''சர்வதேச தரத்துடன் கூடிய தொழில்நுட்ப கல்வியை, இன்ஜினியரிங் கல்லுாரிகள் வழங்க வேண்டும்,'' என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீதாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான புதிய விதிகள் மற்றும் அங்கீகார விதிகள் குறித்த விளக்க கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர் சீதாராம் பேசியதாவது:
வரும் கல்வி ஆண்டு முதல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளில், சில மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. நாடு முழுதும், 25,000 கல்லுாரிகளில், பி.பி.ஏ., - பி.எம்.எஸ்., - பி.சி.ஏ., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகள், இனி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்துடன், தொழில்நுட்ப படிப்புகளாக நடத்தப்படும்.
புதிய ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோராக உருவாகும் ஆர்வம், தொழில்துறைகளுடன் இணைந்த செயல்திட்டம் ஆகியவற்றுடன், பட்டப் படிப்புகள் நடத்தப்பட வேண்டும். பட்டப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதியான நிலையில், கல்லுாரிகளில் இருந்து வெளிவர வேண்டும்.
இதை, கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் அமல்படுத்த வேண்டும். சர்வதேச தரத்தில் கல்வியை வழங்கினால், வெளிநாட்டு முதலீடுகளை நாம் அதிகம் ஈர்க்க முடியும். சமூக, பொருளாதார அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
செமி கண்டக்டர் துறையில், நாம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம். தொழில்நுட்பத்துறையில் மிகவும் உச்ச வளர்ச்சியை நாம் பெற்று வருகிறோம். இதை, சர்வதேச அளவில் எடுத்து செல்ல, திறன் வளர்ப்பு கல்வியும் மாணவர்களுக்கு முக்கியமாக தேவை.
தமிழகத்தை பொறுத்தவரை, உயர்கல்வியில், 50 சதவீதத்துக்கு மேல் இலக்கை எட்டியுள்ளது. விரைவில், 80 சதவீதத்தை எட்டும் என, எதிர்பார்க்கிறோம். எனவே, சர்வதேச மாற்றங்களுக்கு ஏற்ப, கல்லுாரிகள் தங்கள் படிப்பு மற்றும் பாடத்திட்டத்தை, தரமாக உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

