அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு புதிய மதிப்புகள்: பதிவுத்துறை வெளியீடு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு புதிய மதிப்புகள்: பதிவுத்துறை வெளியீடு
ADDED : ஜன 03, 2024 11:43 PM
சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு, தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளை, பதிவுத்துறை வெளியிட துவங்கிஉள்ளது.
தமிழகத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களில், வீடுகளை வாங்குவோருக்கு, நிலம், கட்டட மதிப்புகளை ஒட்டுமொத்தமாக குறிப்பிட்டு, ஒரே பத்திரம் பதியும் நடைமுறை டிச., 1ல் அமலுக்கு வந்தது.
இதற்காக, கிராம வாரியாக மூன்று நிலைகளில், மதிப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டதால், வீடு விற்பனை முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கட்டுமானத் துறை சார்ந்த சங்கங்களுடன், பதிவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
'மூன்று நிலைகளில் மதிப்பு நிர்ணயிக்கும் நடைமுறை கைவிடப்படும்; கட்டடங்களுக்கு தெரு வாரியாக மதிப்பு நிர்ணயிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
இதற்கான அதிகாரம் மண்டல அளவிலான, டி.ஐ.ஜி.,க்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சார் - பதிவாளர்கள் வாயிலாக கிராம வாரியாக வீடு, மனை மதிப்புகள் திரட்டப்பட்டு, மதிப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
மதிப்புகள் வெளியீடு
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மண்டலம், பதிவு மாவட்டம், சார் - பதிவாளர் அலுவலகம், தெரு அடிப்படையில், இந்த மதிப்புகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
டி.ஐ.ஜி.,க்கள் வெளியிட்ட இந்த மதிப்புகளை, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளிப்படையாக காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் இந்த மதிப்புகள், பதிவுத்துறை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.