வேங்கடரமண பாகவதர் 230 வதுஜெயந்தி : மதுரையில் ஜன.2ல் ஆரம்பம்
வேங்கடரமண பாகவதர் 230 வதுஜெயந்தி : மதுரையில் ஜன.2ல் ஆரம்பம்
ADDED : டிச 31, 2010 01:54 AM

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில், சவுராஷ்டிர விப்ர குலத்தில், ததீசி கோத்திரத்தில் ஜகுவான், கு.நன்னுசாமி பாகவதரின் ஐந்தாவது புத்திரராக அவதரித்தார் வேங்கடரமண பாகவத சுவாமி.
இவர் பகுளதசமி மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்.இளமையில் கல்வியுடன், சவுராஷ்டிரா, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய பாஷைகளைக் கற்றார். தந்தையிடம் சங்கீதமும் படித்தார்.
திருவையாறில் வசித்த ராம பக்தரும், நாத பிரம்ம உபாசகரும், நாரதரின் காட்சி பெற்றவருமான சத்குரு தியாகராஜ சுவாமியை தனது குருவாக ஏற்றார். சங்கீதத்தை உலகத்திற்கு பரப்பிய சவுராஷ்டிர விப்ர சமூக சீடர் ஒருவர், தனக்கு சீடராக மாட்டாரா என்று தியாகராஜ சுவாமி பலமுறை நினைத்ததுண்டு.ஒரு ராமநவமியன்று, தியாகராஜ சுவாமி பூஜை செய்து கொண்டிருந்தார். வேங்கடரமண சுவாமி அதற்குரிய பழங்கள், துளசிமாலை ஆகியவற்றை சேகரித்து
வந்தார். துளசியை சுவாமிக்கு சமர்ப்பித்தபடியே 'துளசிதள மூலசே சந்தோஷ முகர்புஜித்து' என்ற கீர்த்தனையைப் பாடிக்கொண்டே அர்ச்சனை செய்த போது, ஒவ்வொரு துளசிதளமும் ரோஜா, முல்லை, சம்பங்கி, மல்லிகைப் பூக்களாக மாறி ஸ்ரீராமனின் பாதத்தில் விழுந்தது.
இந்த அதிசயம் கண்ட தியாகராஜ சுவாமி, பெரும் மகிழ்ச்சியுடன், ''என் அருமை சிஷ்யரே! உனக்கு தெய்வீக சம்பத்து உண்டு. எனது புண்ணியத்தில் உனக்கு பங்குண்டு என்று கூறி, அவரைத் தனது பிரதம சீடராக ஏற்றுக்கொண்டார். திருவையாறில் தை மாதம் பகுளபஞ்சமியை ஒட்டி தியாகராஜ சுவாமி ஆராதனை நிகழ்ச்சி நடப்பதைப் போல, சுவாமிகள் அவதரித்த அய்யம்பேட்டை, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், பரமக்குடி, ஈரோடு, பாளையங்கோட்டை, ராசிபுரம், பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் வேங்கடரமண பாகவதர் ஆராதனை விழா நடந்து வருகிறது.
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவிலுள்ள சவுராஷ்டிர சபையில் (ரங்கமகால்) சுவாமியின் 230வது ஜெயந்தி விழா, ஜனவரி 2ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 4ம் தேதி வரை சுவாமி உபயோகித்த இசைக்கருவிகள், பாதுகை, கிரந்தங்கள் அடங்கிய சுவடிகளுடன் மகாலுக்கு செல்லுதல், உற்சவ விக்ரகத்துக்கு திருமஞ்சனம், பல்வேறு கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது. 4ம் தேதி இரவு 8.15 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

