வங்கதேசத்தினர் பதுங்கல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை
வங்கதேசத்தினர் பதுங்கல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை
ADDED : ஜன 22, 2025 12:40 AM
சென்னை:தனியார் நிறுவன ஊழியர்கள் போல, சட்ட விரோதமாக பதுங்கியுள்ள, வங்கதேசத்தினரை கண்டுபிடிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர்.
தோற்றத்தில் வடமாநிலத்தவர் போல் இருப்பதால், தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு, சந்தேகம் ஏற்படுவது இல்லை.
சில தினங்களுக்கு முன், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், பல்லடம் போலீஸ் நிலைய எல்லையில் சோதனை நடத்தி, வங்கதேசத்தினர், 29 பேரை கைது செய்தனர்.
அதன்பின், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில், ஏழு பேர் சிக்கினர்.
வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, தனியார் நிறுவனங்களில், சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'வங்கதேசத்தினர், சென்னை அருகே, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிகம் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.