அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மோசடி வழக்கில் சிக்கியவர்
அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மோசடி வழக்கில் சிக்கியவர்
ADDED : ஜூலை 03, 2025 01:09 AM

திருமங்கலம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில், புகார் அளித்த நிகிதா குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள்; மறைந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி.
இவரது மகள் நிகிதா முனைவர் பட்டம் பெற்றவர்; திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலை கல்லுாரியில் தாவரவியல் பேராசிரியையாக உள்ளார்.
ஏமாற்று வழக்கு
இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு, திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் 10.5.2011ல் பதிவானது.
இதில், ஜெயபெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு, நிகிதா உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது; குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், நிகிதா, ஆலம்பட்டியில் உள்ள அவரது வீட்டை தனியார் கல்லுாரி நிர்வாக மேலாளர் பாசில் என்பவருக்கு, 70 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின், கூடுதல் பணம் கேட்டதால் அந்த விற்பனை நின்று போயுள்ளது.
திருப்பி தரவில்லை
இந்நிலையில், நிகிதா அந்த வீட்டை மதுரையில் உள்ள வங்கி ஒன்றில், 50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். ஆனால் பாசிலின் பணத்தை நிகிதா திரும்பி தரவில்லை.
மேலும், இவரிடம் மதுரை செக்கானுாரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம், அரசு வேலைக்காக, 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ள வழக்கும் உள்ளது.
இதே போல் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் மேலும் இரு வழக்குகள் நிகிதா மீது உள்ளன.

