கரூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை; நிர்மலா சீதாராமன் தகவல்
கரூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை; நிர்மலா சீதாராமன் தகவல்
ADDED : செப் 30, 2025 07:17 AM

கரூர் : ''கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியது மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கரூர், வேலுசாமிபுரத்தில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய நெரிசல் நடந்த பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் முருகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கும் ஆறுதல் கூறிய பின், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:
கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கினர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
தங்கள் உறவினர்களை இழந்து, அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடிய வில்லை; அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை. இனி இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது.
சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி, கரூர் வருவதாக கூறினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை. மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்துள்ளோம். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு, 50,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறதா என பார்க்க நான் வரவில்லை. பிரதமர் கேட்டுக் கொண்டதால் வந்துள்ளேன். சம்பவ இடத்திற்கு சென்ற போது, கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகம் வந்து விட்டது போன்ற பல்வேறு தகவல்களை கூறினர். யார் மீது தவறு என்று சொல்ல எனக்கு அதிகாரமில்லை.
இந்த விஷயம் சம்பந்தமாக, எங்கள் கட்சி உட்பட எந்த கட்சி தலைவர்களின் கருத்துகளுக்கும் பதில் சொல்ல நான் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறிய கருத்துகள், மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.