பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது: 'மாஜி' ஆவேசம் முன்னாள் அமைச்சர் ஆவேசம்
பழனிசாமி முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது: 'மாஜி' ஆவேசம் முன்னாள் அமைச்சர் ஆவேசம்
ADDED : நவ 17, 2025 01:22 AM
திண்டுக்கல்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அளித்த பேட்டி:
பிரதமர் மோடியுடன் கூட்டணியில் இருக்கும் வரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மீண்டும் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
பீஹாரில் எப்படி நிதிஷ்குமாரை முதல்வராக்கி, பிரதமர் மோடி அழகு பார்க்கிறாரோ; அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., கூட்டணியினர் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை முதல்வராக்குவர்.
ஹரியானாவில் ஓட்டு திருட்டு என தவறான பிரசாரத்தை, பீஹார் தேர்தலில், ராகுல் மேற்கொண்டார். அதையே தமிழக முதல்வர் ஸ்டாலினும் கூறினார்.
ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் உண்மையாகி விடும் என்ற கோயோபல்ஸ் பிரசார பாணியில் செயல்படுகின்றனர். அதை பீஹார் மக்கள் நிராகரித்து விட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பொய் பிரசாரம் செய்கின்றனர். வெளியூர் இடம் பெயர்ந்த; இறந்து போன; முறைகேடாக சேர்க்கப்பட்ட; ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்ற வாக்காளர்களை நீக்குவது தான் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கிய பணி. இதில், தி.மு.க., மற்றும் கூட்டணியினர் என்ன தவறு கண்டனர்?
வரும் டிச., 4 வரை பணி நடந்த பின், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், அடுத்த 3 மாதங்களில், முறையான ஆவணம் தந்து பெயரை சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது, அரசியல் கட்சியினர் கவனம் செலுத்தி, விடுபட்டவர்களை சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

