ADDED : நவ 24, 2025 12:13 AM

திண்டுக்கல்: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது,'' என முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி :
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, அ.தி.மு.க.வுடன் இணைந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். தேர்தலுக்கு நிறைய வாக்குறுதிகளை கொடுக்கத் துவங்கி உள்ளார் விஜய். அவருடைய கனவு நனவாகட்டும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் நிரப்புவதில் சிரமங்கள் உள்ளன. மத்திய அரசு இதை கூர்ந்து கவனித்து, பாமர மக்களும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எளிமைப்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்., காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு, எஸ்.ஐ.ஆர்., தான் காரணம் என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியிருக்கிறார். அவர் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார் என்பதையே அவருடைய கருத்து காட்டுகிறது.
எங்களுக்கு என தனிக்கொள்கை உள்ளது. அந்த கொள்கைக்கு சிதைவு ஏற்படாமல், கூட்டணியில் எங்களுக்கும் வாய்ப்பளித்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவோம்.
பிரிந்து சென்றோர், வெளியே அனுப்பப் பட்டோர் மீண்டும் அ.தி.மு.க.,வுடன் இணைவதற்கு பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உடனான சந்திப்பும் நடக்கிறது; மூவரும் தினமும் பே சுகிறோம்.
என்னை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்துவது ஒருபோதும் நடக்காது. தனிப்பட்ட முறையில், நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை; அதனால், இழ ப்பதற்கு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

