தொடர்ந்து போராடும் நர்சுகள்; முதல்வர் செவிசாய்க்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தொடர்ந்து போராடும் நர்சுகள்; முதல்வர் செவிசாய்க்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 09:36 PM

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த, 18ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும், நர்சுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செவி சாய்க்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும்; தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த, 18ம் தேதி முதல் நர்சுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நீடித்து வரும் நிலையில் நர்சுகளுடன் சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். '750 நர்சுகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும்' என்று சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி அளித்தார்.
இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:நர்சுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செவி சாய்க்க வேண்டும். கடந்த 18ம் தேதியிலிருந்து 8,000த்திற்கும் மேற்பட்ட நர்சுகள் தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டி இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
நர்சுகள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “தற்போது பணியிடங்கள் எதுவும் காலி இல்லை. கலைந்து செல்லச் சொல்லுங்கள்” என்று மிரட்டியிருந்த நிலையில் தற்போது அவர்களில் 724 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றுரைத்துள்ளார். எட்டாயிரம் பேருக்கு மேல் பணி நிரந்தரத்திற்காகத் தவமிருக்கும் நிலையில் அவர்களில் 724 நர்சுகளுக்கு மட்டும் எதன் அடிப்படையில் கூறுகிறது, திமுக அரசு?
இது பிரித்தாளும் சூழ்ச்சியா அல்லது 'பிரச்னைக்கு நாங்களும் ஏதோ செய்துவிட்டோம்' எனும் கண்துடைப்பு நாடகமா? வாக்குறுதி என் 356ல் கூறியது படி, பணி நிரந்தரம் கேட்கும் நர்சுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அன்னையருக்கு நிகரான அவர்களையும் வஞ்சித்து அவர்கள் வயிற்றிலடிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

