கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு: விசாரணை பிப்.26க்கு தள்ளிவைப்பு
கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு: விசாரணை பிப்.26க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜன 23, 2024 05:37 AM
சென்னை : அ.தி.மு.க., கொடி, சின்னம் பயன்படுத்தக் கூடாது என, பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிடக் கோரி, பொதுச் செயலர் பழனிசாமி தாக்கல் செய்த பிரதான வழக்கின் விசாரணையை, பிப்ரவரி 26க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் விசாரணை முடியும் வரை, இடைக்காலத் தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பழனிசாமி தாக்கல் செய்த பிரதான வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பழனிசாமி தரப்பில், வழக்கறிஞர் கவுதம் ஆஜராகி, ''பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த பன்னீர்செல்வத்தின் மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது,'' என்றார். பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஆராய்ந்த பின், பிரதான வழக்கில் வாதாடுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணையை, பிப்ரவரி 26க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

