UPDATED : ஆக 24, 2024 03:03 PM
ADDED : ஆக 24, 2024 02:54 PM

மயிலாடுதுறை: வெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். காவிரி ஆற்றை ஒட்டிய பகுதியில் இவர் வானவெடி தயாரிக்கும் குடோன் அமைத்துள்ளார். இன்று, தீபாவளி வெடி தயாரிக்கும் பணி நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறை மேலபுதுத் தெருவை சேர்ந்த கர்ணன்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். லட்சுமணன்(45), கலியபெருமாள்(52), குமார்(37) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வெடி தயாரிக்கும் கூடம் முற்றிலுமாக இடிந்தது. வெடி சத்தம் பல கி.மீ., தூரத்திற்கு கேட்டதுடன், அருகில் இருந்த வீடுகளில் உணரப்பட்டது. இதனால் டிவி உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. விபத்து குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மயிலாடுதுறை எஸ்பி., ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.