'உபரியாக இருக்கும் டாக்டர்கள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்' அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
'உபரியாக இருக்கும் டாக்டர்கள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்' அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ADDED : நவ 14, 2025 01:00 AM
சென்னை: ''அரசு மருத்துவமனைகளில் உபரியாக இருக்கும் டாக்டர்கள் தான், மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிர மணியன் கூறினார் .
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரை 4,337 டாக்டர்கள், 1,091 மருந்தாளுனர்கள், 131 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 35,469 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 44,535 பேருக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், 80,000 பணியாளர்கள் இதனால் பயன் பெற்றுள்ளனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி ஒரு டாக்டர். தமிழகத்தில் எவ்வளவு டாக்டர் பணியிடங்கள் உள்ளன என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசு டாக்டர் பணியிடங்கள் எண்ணிக்கை 20,000 தான்; 12,000 காலி என்று சொல்கிறார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியில் தான், 35,000 பணி நியமனங்கள் நடந்துள்ளன.
உலகம் முழுதும் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புற்று நோய் டாக்டர்கள், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இருக்கின் றனர்.
ஒரே இடத்தில் உபரியாக டாக்டர்கள் இருக்கின்றனர். 10 டாக்டர்கள் இருக்கின்றனர் என்றால், எட்டு பேரை தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்புவது நிர்வாக சீர்திருத்தம்.
இந்த நட வடிக்கைக்கு டாக்டர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். ஒரு மருத்துவ மனையில், இரண்டு பேர் பணி செய்யக்கூடிய இடத்தில், எட்டு பேர் உள்ளனர். மீதி ஆறு பேரை, தேவையுள்ள இடங்களுக்கு மாற்றுவது நிர்வாக சீர்திருத்தம் தான்.
மருத்துவக் கல்லுாரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களில், கல்லுாரிகள் துவங்க மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

