ADDED : அக் 16, 2024 02:28 AM
சென்னை:'தமிழகத்திற்கு மாதவாரியாக வழங்க வேண்டிய நீரை திறக்க வேண்டும்' என, கர்நாடகாவிற்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், அதன் தலைவர் வீனித் குப்தா தலைமையில், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடந்தது. தமிழகத்தின் சார்பில், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்றனர்.
'தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரும் மாதங்களுக்கு திறப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நீரை, மாதவாரியாக இனிவரும் நாட்களில் கர்நாடகா திறக்க வேண்டும் என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைவர் உத்தரவிட்டார்.
குழுவின் அடுத்த கூட்டம் அக்., 29ம் தேதி நடத்தப்பட உள்ளது.