'இ- - பாஸ்' பெற்ற வாகனங்களை மட்டுமே கொடை, ஊட்டியில் அனுமதிக்க உத்தரவு
'இ- - பாஸ்' பெற்ற வாகனங்களை மட்டுமே கொடை, ஊட்டியில் அனுமதிக்க உத்தரவு
ADDED : நவ 08, 2024 11:07 PM
சென்னை:'இ- - பாஸ்' பெற்ற வாகனங்களை மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என, நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணியருக்கு, இ- - பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த, ஏப்ரலில் உத்தரவிட்டது.
இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்; அதில் எத்தனை பேர் வருகின்றனர்; ஒரு நாள் சுற்றுலாவா அல்லது அதற்கு மேல் தங்குவரா என்பது போன்ற முழு விபரங்களை பெற வேண்டும் என்றும், திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நீலகிரி கலெக்டர் லட்சுமிபவ்யா தன்னீரு, திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி ஆகியோர் ஆஜராகினர்.
இதையடுத்து, சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, கலெக்டர்கள் தரப்பு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், 'ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலா பயணியர் வந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
'இரண்டு கலெக்டர்களும் அளித்த அறிக்கையில் உள்ள புள்ளி விபரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும்' என்றனர்.
இதற்கு பதிலளித்த நீலகிரி கலெக்டர், 'வாகனங்களின் 'நம்பர் பிளேட்'டை தானாக புகைப்படம் எடுத்து பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதால், இனிமேல் முழுமையான புள்ளி விபரங்கள் கிடைக்கும்' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இ - -பாஸ் இல்லாமல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்குள் எந்த வாகனமும் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இ- - பாஸ் பெற்ற பின் தான் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.
இ- - பாஸ் நடைமுறை என்பது சுற்றுலா பயணியரை கட்டுப்படுத்த அல்ல. அதற்கு விண்ணப்பிக்கும் போது, அதில் உரிமம் பெற்ற 'ரிசார்ட்'கள் மற்றும் ஹோட்டல்கள் பற்றிய விபரங்களை இணைக்க முடியுமா என்பது குறித்து, நீலகிரி மற்றும் திண்டுக்கல் கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை டிச., 2க்கு தள்ளிவைத்தனர்.