பாராட்டு விழா எடுப்பது வெட்கக்கேடு ஸ்டாலினை வறுத்தெடுத்த பழனிசாமி
பாராட்டு விழா எடுப்பது வெட்கக்கேடு ஸ்டாலினை வறுத்தெடுத்த பழனிசாமி
ADDED : மே 04, 2025 03:44 AM

சென்னை: ''சட்டசபை தேர்தலில் ஓட்டுகள் சிதறாமல், எதிரிகளை வீழ்த்த, அரசியல் வியூகம் வகுத்துள்ளோம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை தி.நகரில், அ.தி.மு.க., சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை, எந்த பெரிய திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ஆனால் அவர் பெரும் சாதனை செய்துவிட்டது போல பேசிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது தான், அவருடைய ஒரே சாதனை. வரும், 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். வாரிசு ஆட்சி, மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படும்.
கூட்டணி வைப்போம்
பா.ஜ.,வுடன் எப்படி அ.தி.மு.க., கூட்டணி வைக்கலாம் என்று, எங்களை பார்த்து ஸ்டாலின் கேட்கிறார். இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.
கூட்டணி இறுதியாகி, அதை அறிவிப்பதற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளிக்கும்போது, 'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தமிழகத்தில் அ.தி.மு.க., தான் தலைமை தாங்கும்; தேர்தலில் வெற்றி பெற்ற பின், அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்' என்று தெள்ளத் தெளிவாகக் கூறினார்.
ஆனால், அதை இங்கு வேறு மாதிரியாக திரித்துக் கூறி, சிலர் குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர். யார் என்ன செய்தாலும், கூட்டணிக்குள் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்ற, ஒருமித்த கருத்துகள் உடைய கட்சிகள் எல்லாம் விரைவில் எங்கள் கூட்டணியில் சேரும். ஓட்டுகள் சிதறாமல், எதிரிகளை வீழ்த்த அரசியல் வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கண்காணிப்பு
தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், 'அ.தி.மு.க.,வை மிரட்டி, பா.ஜ., பணிய வைத்துஉள்ளது' என, ஸ்டாலின் பேசியுள்ளார்.
வரப்போவது, லோக்சபா தேர்தல் இல்லை, சட்டசபை தேர்தல் என்பதை, ஸ்டாலின் உணர வேண்டும்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பார்த்து, தி.மு.க., அமைச்சர்களின் முகம் தொங்கிப் போயுள்ளது. அவர்கள் முகத்தில் அச்சம் தெரிகிறது.
நான்கு ஆண்டுகள் கொள்ளை அடித்த பணத்தை மறைத்ததால், விரட்டி விரட்டி கண்காணிக்கப்படுகின்றனர்.
அ.தி.மு.க., ஒருபோதும் யாராலும் மிரட்டப்படவில்லை. எங்களை யாரும் மிரட்டியெல்லாம் பணிய வைக்க முடியாது.
தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்குமாறு, அமைச்சர்களிடம், ஸ்டாலின் கூறுகிறார். மக்களை சந்திக்கும் அளவிற்கு என்ன திட்டங்களை, ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.
விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகள் என யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இந்த லட்சணத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எடுப்பது, வெட்கக்கேடனாது.
இவ்வாறு அவர் பேசினார்.