தமிழக உரிமைகளை புறக்கணிக்கும் பழனிசாமி: தங்கம் தென்னரசு
தமிழக உரிமைகளை புறக்கணிக்கும் பழனிசாமி: தங்கம் தென்னரசு
ADDED : செப் 05, 2025 07:23 AM

சென்னை; 'தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.,வுடன் வசதிக்காக கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும், உரிமைகளையும் பழனிசாமி புறக்கணிக்கிறார்' என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அறிவிப்பை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வரவேற்றுள்ளார். அவருடைய வரவேற்பை பா.ஜ.,வின் குரலாக பார்க்கிறேன்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விதிமுறைகளை அவர் உற்சாகமாக பாராட்டினாலும், மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கவும், மாநிலங்களின் நிதி சுயாட்சியை பாதுகாக்கவும், மத்திய அரசு முறையான நிதி பகிர்வு அல்லது வருவாய் வாய்ப்புகளை உறுதிபடுத்த வேண்டும் என்பதை, தன் அறிக்கையின் ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை.
தமிழகம் போன்ற முற்போக்கான மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தங்கள் பங்களிப்பை தக்கவைக்க, வலுவான நிதி உதவியை பெற வேண்டும் என்பதை அவர் அறிவார்.
ஒரு தலைவராக தமிழகத்தின் நலன்களை பாதுகாக்க, மத்திய அரசிடம் இருந்து தெளிவான உறுதிப்பாட்டை பழனிசாமி ஏன் கோரவில்லை?
தமிழகத்தின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக, அவர் தன் குரலை உயர்த்த வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.,வுடன் வசதிக்காக கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும், உரிமைகளையும் பழனிசாமி புறக்கணிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.