அமைதியோ அமைதி... ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி; அமைச்சர் ரகுபதி கிண்டல்
அமைதியோ அமைதி... ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி; அமைச்சர் ரகுபதி கிண்டல்
ADDED : டிச 19, 2024 01:58 PM

சென்னை: அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம். 'வலிக்காமல் வலியுறுத்த' கூட மனமில்லாமல், இ.பி.எஸ்., ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித் ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க.,வும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, தமிழகம் முழுக்க தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பார்லிமென்ட் வளாகத்திலும் தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் வாய் மூடிக்கிடக்கிறார்.
மத்திய பா.ஜ., அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் 'வலிக்காமல் வலியுறுத்த' கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.
யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

