தி.மு.க.,வை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் பழனிசாமி: செந்தில்பாலாஜி
தி.மு.க.,வை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் பழனிசாமி: செந்தில்பாலாஜி
ADDED : பிப் 12, 2025 07:35 PM
சென்னை:'குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி, தோல்வி மேல் தோல்வி கண்ட தோல்விசாமி, பொய்களை வீசி வருகிறார்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும், தி.மு.க., அரசுக்கும், ஈ.வெ.ரா.,வை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓட விட்ட, தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய், தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி, தோல்வி மேல் தோல்வி கண்ட தோல்விசாமி, இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால் தான், மக்களை சந்திக்க முடியாமல், தி.மு.க.,வை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டார்.
'ஓட்டளித்த மக்களுக்கு மட்டும் அல்லாமல், ஓட்டளிக்காத மக்களின் நலனுக்கும் இந்த அரசு பாடுபடும்' என, அறிவித்து செயல்பட்டார் முதல்வர். அதன் காரணமாக, ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., ஓட்டுக்கள் அனைத்தும் தி.மு.க.,வுக்கு வந்துள்ளன. தமிழகம் முழுதும் தி.மு.க.,வுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. முதல்வர் ஸ்டாலினின் அலை தான் தமிழகம் முழுதும் அடித்து கொண்டிக்கிறது. இது, 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

