ADDED : ஜூலை 27, 2025 01:08 AM
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு பிரதமர் மோடியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, தன் பிரசார பயணத்தை ஒத்தி வைத்து விட்டு, பழனிசாமி நேற்று திருச்சி வந்து, அங்குள்ள தனியார் விடுதியில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் தங்கி இருந்தார்.
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, திருச்சி விமான நிலையத்தில், பழனிசாமி சந்தித்து பேசினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வ நாதன், காமராஜ் ஆகியோர் இருந்தனர்.
இரவு, 10:30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர், கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோட்டலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து வெளியே வந்த பழனிசாமி தரப்பினரும் புறப்பட்டு சென்றனர்.
பிரதமரிடம் நலம் விசாரித்த பழனிசாமி, தன் பிரசார பயணம் குறித்து விளக்கினார்.
அதை கேட்டறிந்த பிரதமர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.