ADDED : ஜன 25, 2024 01:50 AM
சென்னை:கோடநாடு கொலை வழக்கில் தொடர்புபடுத்தியதற்காக, மானநஷ்டஈடு கோரிய வழக்கில், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள ஆட்சேபனை கருத்துக்களை நீக்கக் கோரி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டதற்காக, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிடக்கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், மேத்யூ சாமுவேல் பதில் மனுத் தாக்கல் செய்தார். பதில் மனுவில் தவறான கருத்துக்களை கூறியிருப்பதாகவும், அவற்றை நீக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி, 23க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.