பழனிசாமி பயணம்; நடுக்கத்தில் ஸ்டாலின் உதயகுமார் கிண்டல்
பழனிசாமி பயணம்; நடுக்கத்தில் ஸ்டாலின் உதயகுமார் கிண்டல்
ADDED : ஜூலை 10, 2025 06:46 AM

மதுரை : ''நீதி கேட்டு பழனிசாமி மேற்கொண்டு வரும் பயணத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது'' என அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மக்களிடத்தில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டு, தலைமைச் செயலகத்தில் நான்கு துறைகளின் முதன்மை செயலர்களை அழைத்து நான்கரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த நான்காண்டுகளில் துாங்கிக் கொண்டிருந்த ஸ்டாலின், களத்தில் பழனிசாமிக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து வயிற்றிலே புளியைக் கரைத்தது போல உள்ளார்.
அதிகாரிகளிடம் 'எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றதா. சென்றடையவில்லையா' என்று கேட்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் மாணவர்களுக்கு 14 வகை உபகரணங்கள், மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டங்கள் எல்லாம் எங்கே போனது. கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருப்பது யாரை ஏமாற்ற. இளைய சமுதாயம் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை நீங்கள் பறித்து விட்டீர்கள். தாலிக்கு தங்கத்தை பறித்து விட்டீர்கள்.
கறவை மாடுகள், ஆடுகள் திட்டத்தை பறித்து விட்டீர்கள். உங்கள் ஆட்சி அதிகாரத்தை மக்கள் பறிக்க தயாராகி விட்டார்கள்.
அரசு ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் கிணற்றில் போட்ட கல்லாக தான் உள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் 25 பேரை விசாரணை என்கிற பெயரில் படுகொலை செய்தது தி.மு.க., ஆட்சி. இதற்கெல்லாம் நீதி கேட்டு பழனிசாமி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். உங்களின் குடும்ப ஆட்சிக்கு, ஹிட்லர் ஆட்சிக்கு முடிவு கட்டுவார். இவ்வாறு கூறினார்.