பொதுச்செயலராக பழனிசாமிக்கு அங்கீகாரம் மறுபரிசீலனை செய்ய கோரிய மனு தள்ளுபடி
பொதுச்செயலராக பழனிசாமிக்கு அங்கீகாரம் மறுபரிசீலனை செய்ய கோரிய மனு தள்ளுபடி
ADDED : டிச 19, 2024 07:51 PM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமியை அங்கீகரித்ததை மறுபரிசீலைனை செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனு:
நாங்கள், அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர்கள். பொதுச்செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு தொண்டர்கள் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், விதிகளுக்கு முரணாக, கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமியை, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்தது. கட்சி விதிகளில் மேற்கொண்ட திருத்தங்களையும் அங்கீகரித்தது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை காக்கும் வகையில், பொதுச்செயலராக பழனிசாமியை அங்கீகரித்ததையும், கட்சி விதிகளில் மேற்கொண்ட திருத்தங்களை அங்கீகரித்ததையும், மறுபரிசீலனை செய்யக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளோம்.
இந்த மனுக்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கவும், ஆவணங்களை அளிக்கவும், அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை, அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தடை கோரிய மனுவுக்கு, நான்கு வாரங்களில் முடிவெடுக்கும்படி, ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.