ADDED : டிச 13, 2024 10:27 PM
சென்னை:தமிழகத்தில், 2025 ஜனவரி 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில், 199 ரூபாய்க்கும்; 'சிறப்பு பொங்கல்' என்ற பெயரில், 499 ரூபாய்க்கும்; 'பெரும் பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில், 999 ரூபாய்க்கும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விற்க, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இனிப்பு பொங்கல் தொகுப்பில், தலா அரை கிலோ பச்சரிசி, பாகு வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா, 50 கிராம் முந்திரி, திராட்சை, ஆவின் நெய், 100 கிராம் பாசிப்பருப்பு மற்றும் ஒரு பை இருக்கும்.
சிறப்பு பொங்கல் தொகுப்பில், அரை லிட்டர் செக்கு கடலை எண்ணெய், மளிகை, பை உட்பட, 20 பொருட்களும்; பெரும் பொங்கல் தொகுப்பில், 35 பொருட்களும் இடம் பெறும்.
இந்த பொருட்கள், அவற்றை தயாரிக்கும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளன.
சென்னை, காஞ்சிபுரத்தில் தலா, 10,000; மற்ற மாவட்டங்களில், 1,000 - 5,000 என, மாநிலம் முழுதும் ஒரு லட்சம் மளிகை தொகுப்புகள் விற்கப்பட உள்ளன.