மூன்று மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை 'போஷன் அபியான ் ' பணியாளர்கள் புலம்பல்
மூன்று மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை 'போஷன் அபியான ் ' பணியாளர்கள் புலம்பல்
UPDATED : ஜூன் 29, 2025 02:12 AM
ADDED : ஜூன் 28, 2025 07:06 PM

துாத்துக்குடி:தமிழகத்தில், 'போஷன் அபியான்' என்ற தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டமான, ஐ.சி.டி.எஸ்., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின், 60 சதவீத நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், போஷன் அபியான் திட்டத்தில், வட்டார அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளர் என, ஒப்பந்த அடிப்படையில் மாநிலம் முழுவதும், 508 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல், ரத்தசோகை பரவுவதை குறைத்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும், கர்ப்பம் தரிக்கும் பெண்களின் விபரங்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து விபரத்தை ஆப் மூலம் பதிவு செய்யும் பணியில், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், 18,000 முதல் 25000 ரூபாய் வரை மாத சம்பளம் பெற்று, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனாலும், கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் பணியாளர்கள் நேற்று அளித்த மனு:
மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்பச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுக்கு, 3 சதவீத ஊதிய உயர்வும், மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது.
அதையும் உடனே விடுவிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து உரிய சலுகைகள் வழங்க வேண்டும்.
கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும். பணி நிமித்தமாக வெளியூர் செல்வோருக்கு பயணப்படி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
போஷன் அபியான் திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. மத்திய நிதித்துறையில் நிலுவையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் அந்த பணம் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நிதி வந்தவுடன் உடனடியாக ஒப்பந்த பணியாளர்களுக்கான சம்பளம் வழ்்்ங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.