பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு
பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு
ADDED : பிப் 02, 2024 01:30 AM
சென்னை:அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, கூடுதலாக பெறப்படும் தளபரப்பு குறியீடான பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நகர், ஊரமைப்பு சட்டப்படி, புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது, நிலத்தின் அளவுகள் அடிப்படையில், கட்டட பரப்பளவு வரையறுக்கப்பட்டு உள்ளது. ஒரு நிலத்தின் மொத்த பரப்பளவில், எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்கு, தளபரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது நிலத்தின் பரப்பளவில், இரண்டு முதல் 3.5 மடங்கு வரை கட்டட பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலாக தள பரப்பளவு அனுமதி தேவைப்பட்டால், கட்டணம் செலுத்தி பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறலாம்.
இதில், எவ்வளவு சதுர அடி கூடுதலாக கட்டப்படுகிறதோ, அதற்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். அதிக உயரமில்லாத கட்டடங்களுக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 50 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி கட்டடங்கள் என்றால், வழிகாட்டி மதிப்பில், 40 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருந்து, 1640 அடி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.
தற்போது, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும், ஐந்து வழித்தடங்களுக்கு இச்சலுகை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - பரங்கிமலை, கடற்கரை - வண்டலுார், கடற்கரை - மீஞ்சூர், சென்ட்ரல் - திருநின்றவூர் வழித்தடங்களில் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

