ADDED : பிப் 06, 2025 01:43 AM
சென்னை:'தமிழகத்தில் நடப்பு சீசனில் இதுவரை, 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தியதன் காரணமாக, குவின்டால் சன்னரக நெல்லுக்கு, 2,450 ரூபாய்; பொது ரக நெல்லுக்கு, 2,405 ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த 2024 செப்., 1 முதல், இம்மாதம் 4ம் தேதி வரை, மாநிலம் முழுதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1.44 லட்சம் விவசாயிகளிடம், 10.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில், 2,247 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், பிப்., முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.