பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள்; காங்., சொத்து பாதுகாப்பு குழு கைப்பற்றியது
பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள்; காங்., சொத்து பாதுகாப்பு குழு கைப்பற்றியது
ADDED : அக் 18, 2025 07:45 AM

தமிழகம் முழுதும், காங்., சொத்து பாதுகாப்பு குழு மேற்கொண்ட ஆய்வு பயணம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமாக, தமிழகம் முழுதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
இவற்றை மீட்டு, அகில இந்திய காங்கிரஸ் கணக்கில் சேர்ப்பதற்கு, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில், 31 பேர் கொண்ட குழுவை, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார்.
தமிழக காங்கிரசுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு, 4,000 கோடி ரூபாய் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு மட்டும், 2,000 கோடி ரூபாய் என கருதப்படுகிறது.
இது தவிர, அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இவை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இவற்றை மீட்க, தங்கபாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என, கடந்த மே மாதம், அகில இந்திய காங்., சொத்து பாதுகாப்பு குழு தலைவர் விஜய் இந்தர் சிங்கலா உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், தங்கபாலு தலைமையில், சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவின் தமிழக பொறுப்பாளர் நிதின் கும்பல்கர், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, மாநில நிர்வாகிகள் ராம்மோகன், சொர்ணா சேதுராமன், மெய்யப்பன், செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுதும், முதல் கட்ட ஆய்வு பயணத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தனர்.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டன. மேலும், 200க்கும் மேற்பட்ட சொத்துகளுக்கான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -: