ADDED : பிப் 13, 2025 03:07 AM

சென்னை:''அ,தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்'' என தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., கட்சிக்கொடி 25ம் ஆண்டு வெள்ளி விழா, சென்னை கோயம்பேடில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
தே.மு.தி.க., கொடி நாள் வெள்ளி விழாவை, நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஒரு மாத காலத்துக்கு கொண்டாட உள்ளோம். அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தபோதே, ராஜ்யசபா சீட்டுக்கு கையெழுத்து இடப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தே.மு.தி.க., சார்பில், யார் ராஜ்யசபாவுக்கு செல்வார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். தே.மு.தி.க., 20 ஆண்டு கட்சி. ஏற்கனவே, எந்த கூட்டணியில் உள்ளோம் என்பதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்.
முதல்வர் மருந்தகம் தேர்தலுக்காக திறக்கப்படுகிறது. ஏற்கனவே, மத்திய அரசு இதே திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இந்த திட்டம் இருந்தது. அதை பின்பற்றி, இவர்கள் அறிவிக்கின்றனர்.
மக்களுக்கான திட்டமாக இருந்தால், ஆட்சிக்கு வந்தபோதே அறிவித்திருக்க வேண்டும். இவ்வளவு நாட்களுக்கு பின் அறிவித்திருப்பது கண் துடைப்பு. விஜய் அரசியலில் எடுபடுவாரா என்பது குறித்து கருத்து கூற, நான் ஜோதிடர் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

